
திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் பலியாகியுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சரம்குடா பிரதேசத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்த திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் ஒன்றுடனொன்று மோதியே விபத்திற்குள்ளானதாகவும் கூறினார்.
பொத்துவிலிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரும் திருக்கோவிலிலிருந்து பொத்துவில் நோக்கி கடமைக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தருமே விபத்திற்குள்ளானார்கள்.
திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும கந்தசாமி பகீரதன் (வயது 29) என்ற பொலிஸ் உத்தியோகத்தரும் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த மெக்கானிக்கான முதியந்தலவே அனுரா (வயது 49) ஆகிய இருவருமே இந்த விபத்தில் பலியானவர்கள் ஆவார்.
விபத்தில் பலியானவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.