
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த பிரதமர் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை தனித் தனியாக மத்திய வழங்கியின் கீழ் நடத்திச் செல்வதாக உறுதியளித்தார்.
இந்த நிதியத்திலுள்ள பணத்தை சூறையாட முடியாத வகையில் புதிய முகாமைத்துவ நடைமுறை ஒன்றை தயாரிப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ஒருபோதும் இரத்துச் செய்யப்பட மாட்டாது என வலியுறுத்திய பிரதமர், ஓய்வூதிய நடைமுறையில் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக அடுத்த வருடம் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் 2000 ரூபா சேர்க்கப்படவுள்ளது.
எனினும் ஓய்வுபெறும்போது அனைத்து கொடுப்பனவுகளும் ஓய்வூதியத்துடன் இணைக்கப்படும் எனவும் பிரதமர் மீண்டும் உறுதியளித்துள்ளார்.தேசிய சம்பள ஆணைக்குழுவை மீண்டும் ஸ்தாபித்து 6 மாதங்களுக்குள் முழுமையான அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் பிரதமர் சபையில் கூறியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓய்வுபெறுவோருக்கு அக்ரஹார காப்புறுதி கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட அடகு பிடிப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் தவணைக் கொடுப்பனவு நீக்கம் குறித்து வங்கி தலைவர்களுடன் கலந்துரையாடி பொதுவான யோசனையை முன்வைக்குமாறும் பிரதமர் தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
10 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை வங்கிக் கணக்கிலிருந்து மீளப்பெறும்போது அறவிடப்படுகின்ற இரண்டு வீத வரி தொடர்பில் ஆராய்ந்து மத்திய வங்கியிடம் அறிக்கையொன்றை பெற்று பின்னர் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.8 மணித்தியால பணி நேரத்தை மாற்றுவதற்கு எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடம் மே மாதமளவில் தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதாகவும் பிரதமர் மேலும் உறுதியளித்துள்ளார்.