(வி.சுகு )
அம்பாரை மாவட்டம் காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் நேற்று(21) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 42 வயதுடைய ஜயவிக்கிரம என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
உயிரிழந்தவர் சுவாசப் பிரச்சினை காரணமாக இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இறந்தவரின் தொண்டையில் இருந்து பெறப்பட்ட மாதிரியை சந்தேகத்தின் அடிப்படையில் பிசிஆர் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.
இதன் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்பே உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளமுடியும் எனவும் கூறினார்.
அதுவரை சடலம் பாதுகாப்பான முறையில் பிளாஸ்டிக் பையினுள் இட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளும் பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றன எனவும் கூறினார்.
பிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று பிற்பகல் கிடைக்கப்பெற்றதும் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.