
தம்பிலுவில்லில் இடம்பெற்ற விநாயக சதுர்த்தி ஆழிப்புனலாடல். தம்பிலுவில அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவமானது, கடந்த ஆவணி 23ஆம் திகதி (2012.09.08) சனிக்கிழமை ஆரம்பமாகி, கடந்த 10 நாட்களாக திருவிழா நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, விநாயக சதுர்த்தியான இன்று புதன்கிழமை (2012.09.19) , பெருமானின் ஆழிப்புனலாடல்(சமுத்திர தீர்த்தோற்சவம்) இடம்பெற்றது. காலை 9 மணியளவில், சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி, பிரதான வீதி, கிராம சபை வீதியூடாக இடம்பெற்ற சுவாமி ஊர்வலமானது, பொதுமக்களின் நிறைகுட மரியாதையை ஏற்று, காலை 10 மணியளவில், தம்பிலுவில் தாழையடி சிவனாலயத்தை வந்தடைந்தது. தாழையடி சிவனாலய முன்றலில், அத்திரதேவருக்கு திருமுழுக்கு - ஆராதனைகள் நிகழப்பெற்று, அடியார்களின் அரோகரா கோசம் ஒலிக்க, கடலில் தீர்த்தமாடல் இடம்பெற்றது. இதில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டனர். இன்று மாலை, ஆலயத்தில் நிகழும் ஊஞ்சல் பூசையைத் தொடர்ந்து, நாளை 20ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூசையுடன், உற்சவம் இனிதே நிறைவுபெற இருக்கிறது.