அம்பாறை மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியல் வைக்காது அத்தியாவசிய பொருட்களின் விலையை கூட்டி விற்பனை செய்த 12 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார்.
தம்பிலுவில் பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தியபோது திருக்கோவில், தம்பிலுவில், வினாயகபுரம் ஆகிய பிரதேசங்களில் ஆறு வர்த்தகர்களையும் கண்டுபிடித்ததாகவும் பொத்துவில் பாக்கியவத்தை ஆகிய பிரதேசங்களில் ஆறு வர்த்தகர்களைக் கண்டுபிடித்ததாகவும் அவர் தெரிவித்தார். திருக்கோவில், தம்பிலுவில், வினாயகபுரம் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆறு வர்த்தகர்களையும் அக்கறைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 2 ஆம் திகதி ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொத்துவில், பாக்கியவத்தை ஆகிய பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆறு வர்த்தகர்களையும் எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி பொத்துவில் சுற்றயல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். பனடோல், சீனி, குளிர்பானம், உப்பு, கடலை, பாசிப்பயறு, பெரிய வெங்காயம் போன்ற பொருட்களின் விலை கூட்டி விற்கப்பட்டமை சுற்றிவளைப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மாவட்ட இணைப்பாளர் அப்துல் குத்தூஸ் மேலும் தெரிவித்தார்

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!