கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய பிரதேசங்களிலிருந்து யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்து தற்போது திருக்கோவில் பிரதேசத்தில் வசித்து வரும் மக்கள் தங்களை மீண்டும் தமது பிரதேசங்களில் மீளக்குடியமர்த்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கஞ்சிகுடியாற்றிலிருந்து இடம்பெயர்ந்து சுமார் 600 குடும்பங்களும் தங்கவேலாயுதபுரத்திலிருந்து வெளியேறிய சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந் தோரும் தற்போது திருக்கோவில் பிரதேசத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கான திட்டக்கிராமங்களை இப்பகுதியில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் அமைத்துக் கொடுத்துள்ள போதிலும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதையே இந்த மக்கள் விரும்புகின்றனர்.
1990 ஆம் ஆண்டு மேற்படி பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பின்னர் தமது சொந்த இடங்களில் குடியேறினர். மீண்டும் 2006 ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலை காரணமாகத் தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேறிய நிலையிலேயே தற்போது திருக்கோவில் பிரதேசத்தில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இதேவேளை கஞ்சிகுடியாறிலிருந்து இடம் பெயர்ந்து திருக்கோவில் பிரதேசத்தில் வசித்து வரும் ஒருவர் தெரிவிக்கையில் எமது சொந்த இடங்களில் வாழ்வதையே நாங்கள் விரும்புகின்றோம். ஆனால், எம்மை மீளக்குடியேற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையிலும் அரசாங்கம் ஈடுபட வில்லை. அதேவேளை, நாங்கள் சுயமாகக் குடியேறுவதற்கு விரும்பினாலும் எமக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமலுள்ளது. நீங்கள் விரும்பினால் உங்கள் பகுதிகளில் குடியேறுங்கள் ஆனால், நாங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என்று அரச அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே எமது மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்றார்
People Of Thambiluvil & Thirukkovil

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!