நாடளாவிய ரீதியில் இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக இலங்கை பரீட்சைகள்திணைக்களம் அறிவித்துள்ளது.
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை நாளை 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 4670 பரீட்சை மத்திய நிலையங்களில் எதிர்வரும் 17 ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது.இப்பரீட்சைக்கு இம்முறை 664537 பரீட்சாத்திகள் மொத்தமாக தோற்றுவதோடு இவர்களில் பாடசாலை பரீட்சாத்திகள் 403442 பேரும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் 261095 பேரும் அடங்குகின்றனர்.
பரீட்சை நடவடிக்கைகளுக்காக இம்முறை பரீட்சைகள் திணைக்களம் நாடளாவிய ரீதியில் 4670 பரீட்சை மத்திய நிலையங்களை ஸ்தாபித்துள்ளதோடு இவற்றுக்கென 534 இணைப்பு மத்திய நிலையங்களையும் ஸ்தாபித்துள்ளது. பரீட்சை கண்கானிப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் அரச உத்தியோகத்தர்கள் 41 ஆயிரம் பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டவுள்ளனர்.
இதேவேளை இம்முறை பரீட்சை மத்தியநிலையங்களாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையங்களில் விசேட பரீட்சை நிலையங்களாக மெகசின் சிறைச்சாலை, இரத்மலானை, தங்காலை, சிலாபம், மாத்தறை, கொழும்பு ஆகிய இடங்கள் உள்ளடங்குகின்றன
விடைத்தாள்கள் திருத்தும் பணிகள்
நாளை 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பரிட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இரண்டு கட்டமாக இடம்பெறவுள்ளன. இதனடிபடையில் முதலாம் கட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இம்மாதம் 28 ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளதோடு இரண்டாம் கட்டாமாக மேற்கொள்ளப்படும் மதீப்பீட்டு பணிகள் பரீட்சைகள் திணைக்களத்தின் தீர்மானித்தின் படி முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனடிபடையில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 55 நகரங்களை சேர்ந்த 87 பாடசாலைகளின் 108 மதிப்பீட்டு நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்
நாளைய தினம் பரீட்சைகள் நடைபெறுவதையடுத்து பரீட்சாத்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் சில அறிவுறுத்தல்களை
வழங்கியுள்ளது. அந்தவகையில் பரீட்சைகள் ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பாக தமக்கான பரீட்சை நிலையங்களுக்கு தனியார்,
பாடசாலை பரீட்சார்த்திகள் வருகை தரவேண்டும், பரீட்சை நிலையங்களுக்கு கையடக்க தொலை பேசிகள் மற்றும் தேவையற்ற உபகரணங்கள் கொண்டுவருவது தடைசெய்யப்பட்டுள்ளது, பரீட்சாத்திகள் பரீட்சை அனுமதியட்டை உட்பட தேசிய அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவருதல் வேண்டும். பரீட்சைகள் சட்டதிட்டத்திற்கமைவாக பரீட்சாத்திகள் பரீட்சையில் தோற்ற வேண்டும்.