
பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கொற்றலை, அடையாறு, ஆரணி, பாலாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் பலவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை, அண்ணாமலை பல்கலை, திருவள்ளூர் பல்கலை, சென்னை மாநிலக் கல்லுாரியில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மழை நீரில் சிக்கியவர்களை மீட்க, மீட்புக்குழுவினருடன் இணைந்து ராணுவத்தினரும், கப்பற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நாளில் 256 மி.மீ., மழை பதிவு : சென்னை அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று(01-12-15) காலை 8.30 மணி முதல் தற்போது வரை தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதில் சென்னையில் மட்டும் சராசரியாக நேற்று ஒரே நாளில் 256 மி.மீ., மழை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 118 மி.மீ., மழையும், மீனம்பாக்கத்தில் 175 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
விமானநிலையம் மூடல்: சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய, வரவேண்டிய 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான ஓடுபாதையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக காலை 10 மணி வரையிலான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானநிலையம் மூடப்பட்டு, விமான நிலையத்தில் தவித்து வரும் 1,500 பயணிகள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.