இந்த நாட்டுக்கே முன்மாதிரியாக அனைத்துக் கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி நல்லாட்சியை முதன்முதலில் ஏற்படுத்தியது கிழக்கு மாகாண ஆட்சியே. இதன் பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தேசிய ரீதியில் நல்லாட்சியை ஏற்படுத்தினர். இதற்குக் காரணம் கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் மூவின மக்களும் பிரிந்துநின்று அனுபவித்த துன்பங்களின் படிப்பினையே என மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். திருக்கோவில் பிரதேச வைத்தியசாலையில் அவசரச் சிகிச்சைப் பிரிவை புதன்கிழமை (04) மாலை திறந்துவைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நாட்டில் சகல இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டுமெனச் சிந்தித்து, நல்லிணக்க நடவடிக்கையாக கிழக்கு மாகாணத்தில் நல்லாட்சியை ஏற்படுத்தி வருகிறோம். இதயசுத்தியுடன் இனப்பாகுபாடுகள் இல்லாமல், அனைத்துக் கட்சிகளும் இணைந்த நல்லாட்சியை முன்னெடுத்துள்ளோம்' என்றார். 'நாட்டில் தேசிய அரசு செயற்படுகின்றபோதிலும், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருக்கிறது. ஆனால், நாம் மாகாணத்தில் ஒன்றாக ஆட்சி செய்கிறோம். கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதற்கான தீர்வுகளை ஒன்றுபட்டுத் தேடவேண்டும். இம்மாகாணத்தில் மூன்று இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்;புகள் தேவைப்படுகின்றன. நான்காயிரம் பட்டதாரிகள் வேலையை எதிர்பார்த்திருக்கின்றனர்.
மேலும், இம்மாகாணத்திலிருந்து சுமார் 16,871 பேர் வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் காரணம் கடந்த காலத்தில் காணப்பட்ட கசப்பான யுத்த சம்பவங்களாகும். எனவே, இவ்வாறான பிரச்சினைகளை இல்லாமல்ச் செய்வதுடன், கிழக்கு மாகாணத்தில் இன வேறுபாடுகளின்றி சிறந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்வைக் கட்டியெழுப்பவேண்டும்' எனவும் அவர் தெரிவி;த்தார்.
