திருக்கோவில் வனஜீவராசிகள் திணைக்களப் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 06 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக அத்திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த யானை பொறிவெடியில் சிக்கிய நிலையில் அதன் வாயில் காயம் ஏற்பட்டிருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகின்றது.
இதனால் இந்த யானை 03 வாரங்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ளவோ, நீர் அருந்தவோ முடியாதிருந்தது. இந்த யானைக்கு அம்பாறை வன ஜீவராசிகள் திணைக்கள மருத்துவர்கள் வாய் மற்றும் கால் பகுதிகளில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளித்து வந்திருந்தனர். திருக்கோவில் பிரதேசத்தில் இந்த வருடத்தில் இதுவரையில் 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.