Contact Form

Name

Email *

Message *

பிரதேசத்தில் உச்சமடையும் கடலரிப்பு! மக்கள் அவதானம் தேவை!!!

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த நம்ம ஊரு கடற்கரையில நடக்கிற கொடுமைய கொஞ்சம் கவனிக்கிறேலோ என்ற கட்டுரையை நாம் ஞாபகப்படுத்துவது நல்லது.  அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட…

Image

சில மாதங்களுக்கு முன் வெளிவந்த நம்ம ஊரு கடற்கரையில நடக்கிற கொடுமைய கொஞ்சம் கவனிக்கிறேலோ என்ற கட்டுரையை நாம் ஞாபகப்படுத்துவது நல்லது.  அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டபடி, தற்போது, மிக மோசமான கடலரிப்புக்கு, எமது பகுதி முகங்கொடுத்து வருகின்றது என்பதை, பெரும்பாலான ஊர்மக்கள் அறிந்திருப்பீர்கள்.
சிலவாரங்களாக, கடலலைகள் உக்கிரமாக, கரைப்பகுதியைத் தாக்குவதால், பல இடங்கள் முற்றாக கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே கடல்நீர் தேங்கி தற்காலிக நீர்த்தேக்கங்களையும் உருவாக்கியிருக்கிறது.

கடலரிப்பு தொடர்ந்தால், கடலை அண்டிய நமது முழுப்பிரதேசமுமே முற்றாக கடலால் காவுகொள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை.

மண் இடமாற்றம் நிகழ்கிறதா?

2004  ஆழிப்பேரலைக்கு முன்பு பயன்பட்டுவந்த திருக்கோவில் மயானமூடான  கடற்கரை வீதி, கடந்த பெப்ரவரி, மார்ச்சு மாதங்களில் முற்றாக அரிக்கப்பட்டு மண்மூடிக் கிடந்தது. ஆனால்,இன்றைக்கு  கடலைக் காண்பதற்கு, வீதியிலிருந்து சில மீற்றர் தூரம் நடந்துசெல்லவேண்டும்!

கடற்கரை வீதி, பெப்ரவரியில்.
அப்பொழுது, பரந்து விரிந்த வெண்மணற்பரப்பைக் கொண்டிருந்த, தம்பிலுவில் குருகுலம், மற்றும் பழைய சாயி சமிதி பகுதிகளோ, இன்று, கடலலைகள், தென்னைமரங்களை வேரோடி பிடுங்க எத்தனிக்கும் அளவுக்கு, ஆவேசமான அலைகளைக் கொண்ட இடங்களாக மாறியுள்ளன.  


சில மாதங்களுக்கு முன்!
                                   
தற்பொழுது!

இடைப்பட்ட காலப்பகுதியில், இவ்விரு இடங்களிடையே மண் இடமாற்றப்பட்டிருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது. எனினும், இத்தகைய
 
மண் இடமாற்றப்படல், பண்டுதொட்டு இயற்கையாக நடந்துவந்திருந்தாலும், அதன் தாக்கம் பெரிதாகத் தென்படவில்லை. இன்று தென்படுகின்றதென்றால் நிலைமை பாரதூரம் என்றுதானே அர்த்தம்!


முக்கிய காரணிகள்!
சமநிலை குழம்பினாலும், எல்லா இயற்கை சூழற்றொகுதிகளுக்கும் தம்மைத் தாமே மீளமைத்துக்கொள்ளும் வல்லமையுண்டு. ஆனால், கடற்கரையால் சமநிலையைப் பேணமுடியாதவாறு, நமது பகுதியில், கடலரிப்பு நிகழ்வதற்கான காரணங்கள் என்ன? இதற்கு இரு பதில்கள் கிடைக்கின்றன.

முதலாவது, ஒலுவில், கல்முனை பகுதிகள் உட்பட, கிழக்குக் கரையோரம் முழுவதும், சமாந்தரமாக தீவிரமடைந்துள்ள கடலரிப்பை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஒலுவில் துறைமுகப்பணிகள், கடலரிப்புக்கான முக்கிய - மறைமுகக் காரணியாக இருக்கலாமோ என சந்தேகிக்கத் தூண்டுகிறது. (புவியியல் கற்றவர்கள், இதற்கு சாத்தியம் இருக்கலாமா என ஆராய்ந்து பாருங்களேன்!)

இரண்டாவது..... சட்டவிரோத மண்ணகழ்வு!!! தாய்மண்ணை கடலிடம் தாரைவார்ப்பதற்காக, நாமும் சேர்ந்து குழி வெட்டுவது தான் மிகுந்த சோகம்!



இது நடவா விட்டால், இந்தளவு ஆபத்தான அரிப்பு ஏற்பட்டே இருக்காது என அடித்துச் சொல்லலாம்.

ஒருகாலத்தில், உல்லைக்கு அடுத்தபடியாக மண்மேடுகளுக்கு பெயர்போன பகுதி, நம் கடற்கரைப் பகுதி.  "மணற்காடு" என்று பெயர்தந்த, அந்த மணல்மேடுகள் இன்று எங்கே?

இந்நிலை தொடர்ந்தால், ஏற்கனவே, கடலுக்கான மாரிகால ஊடாடுபுலங்களாக இருக்கும், பெரியகளப்பும்,கோரைக்களப்பும், இந்தப் பிரதேசத்தை கபளீகரம் செய்வது, அவ்வளவு கடினமானதா என்ன?... அவற்றூடு கடல் இணைந்து, சாகாமம், கடலோரக் கிராமமாவதற்கு அதிகநாள் எடுக்காது?




என்ன செய்வது?

பழியைத் தனியே ஒருவர் தலையில் சுமத்திவிடுவதும், தம்மை மட்டும் நியாயப்படுத்துவதும் எப்போதும், எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வாகிவிடாது! நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் எல்லோருமே குற்றவாளிகள் தான்!

மண்ணகழ்வைத் தடுப்பதும் தவிர்ப்பதுமே, ஓரளவுக்கேனும் பலன் தரக்கூடியது. கண்டற்தாவரங்கள் நடுகையும், சற்றுப் பலன் தரக்கூடும். "சம்பந்தப்பட்டவர்கள்" என்று குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கடமையை ஒப்படைக்காமல், அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். இது குறிப்பிட்ட கிராமங்களின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல! தம்பட்டை, நாற்பதாங் கட்டை எல்லாம் சேர்த்து, நமது மொத்த பிரதேசத்தின், இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குடிமக்களின் பிரச்சனை!

You may like these posts