தீர்த்த உற்சவத்தில் கலந்துகொண்டது, திருக்கோவில் முருகன்
கோவிலில் "ஆடி அமாவாசை வேலவா " "முருகன் பாடல்கள் " ஆகிய
இசை குறுந்தகடுகளில் இருந்து நானும், எனது மைத்துணர்
இரா. தெய்வராஜன் அவர்களும் பாடல்கள் பாடியது, அதன்பின் உகந்தை
சென்று பக்திப்பாடல்கள் பாடியது, எங்களுடன் திரு.சண்முகராஜா,
திரு.நந்தன் ஆகியோர் இணைந்துகொண்டு பாடியது....எல்லாம் மனதுக்கு
மகிழ்ச்சியை தந்தது.
ஆனால் மனதுக்கு வருத்தத்தையும், நெருடலையும் தந்த ஒரு விடயமும்
இருந்தது. அதை சொல்லலாமா, வேண்டாமா என்று, இன்றுவரை
நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் சம்பந்தப் பட்டவரிடமிருந்து
இதுவரைக்கும் எந்த எதிர்வினைகளும் இல்லை. அதுவும் மனதை
காயப்படுத்துவதாகவே இருந்தது.
இம்முறை தம்பிலுவில் மகாவித்தியாலத்தில் வெளியீடு செய்து, ஊர்
முழுதும் ஒலித்த "ஆடி அமாவாசை வேலவா" என்ற இசைத்தட்டை
லண்டனில் உள்ள திரு. ராஜன் அவர்கள் தனது தந்தை அமரர் எஸ்.டி
அரசரெத்தினம் அவர்களின் நினைவாக தயாரிக்க முன்வந்தார். தயாரிப்பு
செலவும் இம்முறை ஐம்பது வீதக் கழிவில் கிடைத்தது. அதன்படி ராஜன்
800 பிரித்தானிய பவுண்கள் (800 sterling pounds) தந்தார். அது சென்னைக்கு
அனுப்பப் பட்டு தயாரிப்பு நல்ல முறையில் முடிந்தது. திரு.ராஜன்
கேட்டுக்கொண்டதுக்கு ஏற்ப இசைத்தட்டின் முன் பக்கத்தில் முருகன்
படத்திற்கு கீழே அவரின் தந்தையார் அரசு ஐயா அவர்களின் படம் மட்டுமே
போட்டு வடிவமைக்கப் பட்டிருந்தது. இதை இசைத்தட்டை பெற்றுக்
கொண்டவர்கள் அறிவார்கள். இந்த இசைத்தட்டை தான் ஊருக்கு வந்து
பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று சொல்லியிருந்த ராஜன்
ஊர் வரவுமில்லை, சொன்னபடி ஒன்றும் செய்யவுமில்லை. ஊரிலிருந்து
இருந்து தொடர்புகொண்டபோதும் தொடர்பை, தொடரவில்லை. நான்
தம்பிலுவில் இந்து மாமன்றம் மூலம் அனுசரணையும் கேட்டு, ஒழுங்கு
செய்திருந்தேன். ஆனால் ராஜனின் தொடர்பற்ற தன்மையால் ஒருவரும்
கடைசிவரை வரவும் இல்லை. ஒத்துழைக்கவும் இல்லை. அவர்களில்
எந்த தப்பும் இல்லை. சம்பந்தப்பட்டவர் எந்த தொடர்பும் எவருடனும்
ஏற்படுத்தவில்லை. பலர் கேட்ட கேள்விகளுக்கு என்னாலும், தெய்வராஜனாலும் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் அரசு
ஐயாவில் நாங்கள் கொண்ட மதிப்பின் காரணமாக, ஒரு அரை நாளில்
ஓடி, ஆடி உருக்குலைந்து, கல்முனை சென்று பெரிய பென்னர் செய்து
அழைப்பு அறிவித்தல் கொடுத்து, தம்பிலுவில் மகாவித்தியாலய அதிபர்
அவர்களின் அன்பான உபசரிப்புடனும், அனுமதியுடனும் ஒரு வெளியீடு
செய்வதற்கு மிகப் பிரயத்தனப் பட்டோம். எங்களோடு தோள்கொடுத்த
தம்பி சயனொளிபவன், அவரது உதவியாளர், மற்றும் இளையோருக்கு
நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். எங்கள் குறுகிய கால
அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்துகொண்டு இசைத்தட்டுபற்றியும்,
அரசு ஐயா அவர்கள் பற்றியும் ஆழமாக பேசிய திருவாளர்கள்.பரஞ்சோதி
ஆசிரியர், திரு. கண்ணன் G.S அவர்கள், திரு.ஞா. வினயகமூர்த்தி ஆசிரியர்
திருமதி.ஜெகதீஸ்வரி நாதன் ஆசிரியை, ஆகியோருக்கும், நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கிய திரு. என்.எஸ். தியாகராஜா அவர்களுக்கும்
அழைப்பை ஏற்றுவந்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி
கூறுகின்றோம்.
தம்பிலுவிலில் உள்ள அரசு ஐயாவின் சொந்தங்களுக்கு நேரில் சென்று
அழைப்பு கொடுத்தும் ஒருவர் கூட நிகழ்வுக்கு வராதது மிக வேதனையை
துன்பத்தை தந்தது. அரசு ஐயாவின் நினைவாக வெளியிடப்பட்ட இந்த
இசைத்தட்டை பெற்றுக்கொள்ள அவர் உறவுகள் ஒருத்தரும் வராதது
இந்த வெளியீட்டுக்கு அர்த்தமே இல்லாமல் போனதுபோலே இருந்தது.
என்ன இருந்தாலும் நாங்கள் சொன்னதுபோல், அரசு ஐயாவுக்கு பெரிய
பென்னர் கட்டி, அவரின் நினைவாக இதை வெளியிட்டது எங்களுக்கு
மகிழ்ச்சியே.
சில நேரங்களில் சில மனிதர்கள் பிழையாகவும் முடிவெடுப்பதுண்டு
இல்லையா? இந்த இசைத்தட்டு விவகாரத்தில் நானும் அப்படி எடுத்துவிட்டேன் என்று எண்ணுகிறேன். இதை ஒரு படிப்பினையாகவும்
பாடமாகவும் எடுத்துக்கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?