
[NR]
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர்.செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி விரதமானது கடந்த 28.10.2019 திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இறுதி நாளான 02.11.2019 சனிக்கிழமை இன்று சூரசம்ஹார நிகழ்வுடன் நிறைவுற்றது. இதன்போது இன்று காலை வேளையில் சூரபத்மனின் வீதி உலா நிகழ்வு இடம் பெற்று இதனை தொடர்ந்து ஆலயத்தின் வெளி வீதியிலே மாலை 3.30 மணியளவில் சூரசம்ஹார நிகழ்வானது ஆரம்பமாகிய வெகுசிறப்பான முறையில் நடைபெற்றது.
மேலும் இவ் கந்த சஷ்டி விரத கிரியைகள்யாவும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களவர்களினால் மற்றும் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குஷனாதக்குருக்கள் ஆகியோரினால் நடாத்தி வைக்கப்பட்டது. இதன் போது சுவாமி கந்தப் பெருமான் போரின் போது சூரபத்மனின் ஒவ்வொரு தலைகளை கொய்கின்ற காட்சிகளினை கந்தபுராணத்தில் உள்ளவாறு சூரன்போர் நிகழ்வானது இடம் பெற்றது. இதில் ஏராளமான பக்த்த அடியார்கள் பல பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்டனர்.
































