புதிய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பின்படி அதிபர் சேவை தரம் 3 இற்காக எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் நடத்தப்படவிருந்த போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி. உதயரூபன் தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும்பணி எதிர்வரும் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைகின்றது.
மறுநாள் அதிபர் சேவை போட்டிப் பரீட்சைக்கு தேதி குறிக்கப்பட்டு பரீட்சார்த்திகளுக்கான நேர அட்டவணையும் முன்னதாகவே அனுப்பப்பட்டிருந்தது.
எனினும், க.பொ.த.உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியிலீடுபட்டுள்ள, அதிபர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள் அதற்காக ஆயத்தப்படுத்த முடியாமலும் கொழும்பு போன்ற தூர இடங்களில் வினாத்தாள் திருத்தும் பணியிலீடுபட்டுள்ளவர்கள் பயணக் கஷ்டத்தையும் எதிர்நோக்க வேண்டிவரும் என்பதால் இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட இன்னும் பலர் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திடம் மேற்படி பரீட்சையை பிற்போடும்படி கேட்டுக் கொண்டனர்.
அதனடிப்படையில் பிறிதொரு தினத்திற்கு இந்தப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.
நாடுபூராகவும் தேசிய, மற்றும் மாகாண அரசாங்கப் பாடசாலைகளில் நிலவும் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்தப் பரீட்சை இடம்பெறவிருந்தது.
புதிய அதிபர் சேவைக்காக கிரகித்தல், பொது அறிவு, மற்றும் பாடசாலை நிருவாகம் தொடர்பான சம்பவக் கற்கை உள்ளிட்ட 5 மணித்தியாலத் தேர்வில் பரீட்சார்த்திகள் தோற்றுவர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!