
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட மூவரை கைதுசெய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பொத்துவில் - விநாயகபுரம் பிரதான வீதியில் உள்ள சமுர்த்தி வங்கிக் கட்டிடத்திலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தீ பரவியுள்ளது.
இந்த நிலையில், குறித்த வங்கியினுள் தீ பரவியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் வங்கியில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் அனைத்திலும் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
குறித்த வங்கியின் கணக்குகளை ஆராய்வதற்காக உயர் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை வருகை தரவிருந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை, குறித்த வங்கியில் வைக்கப்பட்டிருந்த முக்கியமான ஆவணங்கள் எரியவில்லை எனவும் ஒரு கணினி, மேசைகள் மற்றும் ஆவணங்கள் எரிந்துள்ளதாக சமுர்த்தி தள முகாமையாளர் ப.அரசரெத்தினம் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்