விண்வெளியில் உடைந்த ரொக்கெட் ஒன்றின் பாகம் என சந்தேகிக்கப்படும் மர்மப்பொருள் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நாட்டின் தென்பகுதிக் கடலில் உடைந்து வீழும் அச்சுறுத்தல் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் டெய்லி மெயில் உட்பட பல இணையத்தளங்களில் இந்த விண்வெளி மர்மப் பொருள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
WTF1190F என இதற்கு விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை நேரப்படி முற்பகல் 11.50 மணிக்கு, தென் கடற்பரப்பிலிருந்து 65 கிலோமீற்றர் தூரத்தில் குறித்த மர்மப்பொருள் விழக்கூடும் என விஞ்ஞானிகள் அனுமானித்துள்ளனர்.
7 அடி நீளம் கொண்ட இந்த விண்வெளிப் பொருள் அப்பலோ விண்வெணி ஆய்வின் கீழ் 40 வருடங்களுக்கு முன்னர் விண்ணில் ஏவப்பட்ட ரொக்கெட்டின் பாகமென விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டில் இதனை முதன் முதலாக அவதானித்துள்ளனர். பின்னர் அரிசோனா பல்கலைக்கழகத்தின் கற்றலினா விண்வெணி ஆய்வு மையம் இதனை மீண்டும் கண்டுபிடித்துள்ளது.
தற்போது இந்த விண்வெளி மர்பப் பொருளின் பயணப்பாதையை மிக அருகில் அவதானித்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி மையத்தின் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இவ்வாறு மர்மப்பொருள் வீழ்வது அரிய சந்தர்ப்பம் என்பதால் உலகின் அவதானம் குவிந்துள்ளதாக சர்வதேசச் செய்திகள் தெரிவித்துள்ளன.