மிகவும் சேதமடைந்த நிலையிலுள்ள தமது வாசிகசாலைக் கட்டிடத்தை புனரமைத்து அல்லது புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்துத் தருமாறு சங்கமன் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருக்கோவில் பிரதேசத்தின் கடைசிக் கிராமமான சங்கமன் கிராமத்தின் மேற்படி வாசிகசாலையானது திருக்கோவில் பிரதேச சபையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட இந்த சங்கமன் கிராம வாசிகசாலைக் கட்டிடமானது மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதாகவும், இதனைத் திருத்தியமைத்துத் தருமாறு அல்லது புதிய வாசிகசாலைக் கட்டிடமொன்றை நிர்மாணித்துத் தருமாறு பலரிடம் வேண்டுகோள் விடுத்தும் இதுவரை எவ்வித பலன்களும் ஏற்படவில்லை என்றும் இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த வாசிகசாலையினைச் சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அதேவேளை, இவ்வாசிகசாலையின் சுற்றுச் சூழலில் உயர்தரப்பாடசாலை உள்ளிட்ட இரண்டு பாடசாலைகள் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே, சங்கமன் கிராம வாசிகசாலைக்கான கட்டிடம் தொடர்பில் உரியவர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!