
இந்துக்களின் கலைவிழாவான நவராத்திரி விரதமானது இன்று (2011.09.28) ஆரம்பமாகி 2011.10.06 அன்று விஜயதசமியுடன் நிறைவுபெறுகிறது. இதை முன்னிட்டு நமது பிரதேச ஆலயங்களில் நவராத்திரி விரத கால விசேட பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இல்லங்களில் தேவி பூசை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன, மேலும் அலுவலகங்கள், பாடசாலைகள் என்பவற்றில் இறுதி 4 நாட்களிலும் வாணி விழாவும் விசேட கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நவராத்திரி காலத்தில் வீரம்,செல்வம், கல்வி என்பவற்றை வேண்டி, ஆதிபராசக்தியின் அம்சங்களான துர்க்கா,லக்ஷ்மி,சரஸ்வதி ஆகியோரை வழிபடல் வழக்கமாகும்.
நவராத்திரி என்பது சக்தியின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் புனிதநாள். நவராத்திரி என்ற சொல்லுக்கு ""புதிய இரவு'' என்றும் ""ஒன்பது இரவுகள்'' என்றும் பொருள் உண்டு. எல்லோருடைய பாவங்களையும் மன்னித்து அவர்களுக்கு கருணை காட்டி இகத்திலே சுகத்தையும், பரத்திலே இருக்கையையும் கொடுக்கும் ராத்திரி நவராத்திரி ஆகும்.