அம்பாறை மாவட்டத்தில் 5 இடங்களில் போட்டியிட இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் .திருக்கோவில் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச. சந்திரகாந்தன் தலைமையிலான சந்திப்பு அவரின் இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற போது ஏகமனதாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
இவ் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் திருக்கோவில் பிரதேச 12 வேட்பாளர்களும் ஒன்றிணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும், தமிழ் தேசியத்திற்காகவும் உரிமைக்காகவும் பாமர மக்களின் நலனுக்காகவும் தமிழ் கூட்டமைப்பின் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு உந்து சக்தியாகவும் ஒன்றிணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பொதுவான துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிடுவதும் திருக்கோவில் பிரதேசத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரியாலயமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் வீட்டில் இயங்கவும் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட காரியாலயமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வேட்பாளர்களின் இலக்கம் தேர்தல் ஆணையாளரினால் வழங்கப்பட்டதும் பிரதேசத்தின் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயம், கத்தோலிக்க ஆலயம், மெதடிஸ்த தேவாலயம் போன்ற ஆலயங்களின் தரிசனத்துடன் எதிர்வரும் 3 தினங்களின் பின் தேர்தல் பிரசார நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடும் நாவிதன்வெளி, காரைதீவு, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய 5 இடங்களிலும் தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் வெற்றிபெற்று சர்வதேசத்திற்கும் அரசிற்கும் தமிழர்களின் உரிமையை வலியுறுத்தவுள்ளது என அவர் தெரிவித்தார்
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!